×

தேனி கொடுவிலார்ப்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞர் கைது..!!

தேனி: தேனியில் வாக்கு எனும் மையத்துக்குள் நுழைய முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பதிவான மின்னணு வாக்குகள் அடங்கிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்கம் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் போலீசாரும் உள்ளே துணை ராணுவ படையினர் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறையில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்திய வகையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நுழைவு வாயிலில் பணியிலிருந்த போலீசார் கண்காணித்திருந்த போது இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அத்துமீறி நுழைந்துள்ளார்.

அவரிடம் விசாரித்ததில் அவர் போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். விசாரணையில் அவர் சின்னமனூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 27 வயது நிரம்பிய ராஜேஸ்கண்ணன் என்பது தெரியவந்தது. இவர் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள கம்மவார் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது.

இது தொடர்பாக கொடுவிலார்பட்டி விஏஓ மதுகண்ணன் அளித்த புகாரின் படி 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துமீறி உள்நுழைதல், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைதல், 448, 188, 294 உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட ராஜேஷை சிறையிலடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தேனி கொடுவிலார்ப்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Teni Kotuvillarpati ,Teni ,Vawat ,Kammawar Sangam College ,Teni Koduvilarpatty ,Theni Lok Sabha ,Teni Kotuvilarpatty ,
× RELATED தேனி மாவட்டம்; வெறிநாய் கடித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயம்!